விருப்பங்கள்

Thursday, March 10, 2011

கலைஞருக்கு எழுதப்பட்ட ஒரு காதல் கடிதம்..?

கலைஞருக்கு எழுதப்பட்ட ஒரு காதல் கடிதம்..?


கடிதம் எழுதுவதிலும், தந்தி கொடுப்பதிலும், கை தேர்ந்த அரசியல்வாதி கலைஞர். கலைஞருக்கே காதல் கடிதமா?.  ஆம்!
இது கண்டிப்பான கடிதம் அல்ல பிரியத்தில் எழுதப்பட்ட கடிதம். ஆதலால் காதல் கடிதம் என்கிறோம். சிக்கலான விடயங்களில் கருத்துத் தெரிவிக்க உடன் பிறப்புக்கு எழுதும் கடிதம், முடிவெடுக்க முடியாது தப்பிக்க நினைக்கும் விடயங்களில் தந்திரமாக தந்தி அடிப்பது என்பன கலைஞர் பார்மூலா.
காங்கிரஸில் இருந்த விலகிய தமிழருவி மணியன் அன்மையில் கலைஞருக்கு அதே பாணியில் ஒரு பகிரங்கக் கடிதம் எழுதியிருந்தார். அது அரசியல் பேசும் கடிதம். ஆனால் இங்கு நாம் பதிவு செய்வது அத்தகைய கடிதம் அல்ல. இது கள்ளுறும் காதல் கடிதம். கடிதத்தை வடித்தவருக்கும்,  முதலில் பதிவு செய்த 'பசுமை இந்தியா' அமைப்பின் வலைத்தளத்துக்கும் உரிய நன்றிகளுடன் இங்கே மீள் பதிவு செய்கின்றோம்.-4Tamilmedia Team
ஐயா வணக்கம்! என்னை பற்றி சொல்லும் முன் உங்களுக்கு என் வாழ்த்தை தெரிவிக்கிறேன். காரணம், குமரியில் வானுயர சிலை அமைத்தீர்களே வள்ளுவர் அவர் என்ன சொன்னார் தெரியுமா?

" செம்பொருள் கண்டார்- என்றும்
ஞாலத்து அறம்பொருள் கண்டார்"

இதன் மறைமுக பொருள், "தத்துவ ஞானிகள் ( நமக்கும் மற்றவருக்கும் புலப்படாத ஒரு உண்மையை கண்டுபிடித்துக் கூறுபவர்கள்) தாம் தத்துவ ஞானிகள். இன்னும் விளக்கமாக சொன்னால்...திருக்குறளில் குறிப்பிடப்பட்டுள்ள காட்சியர்  என்றும் இவர்களை சொல்லலாம்.  தத்துவஞானிகள் என்பவர்கள் உடல், உயிர்,இயக்கம்,பொருள், உலகம், சமுதாயம், பிரபஞ்சம் ஆகியவற்றின் உண்மை நிலைகளையும், இவற்றிற்குள்ள தொடர்புகளையும், உறவுகளையும் ஆய்பவர்களே. இவர்கள் அறிவியல் கற்ற மேதைகள் அல்ல. ஆனால் அதே நேரத்தில் பிதற்றுபவர்களும் அல்ல.

1724 ல் நவீன ஐரோப்பிய தத்துவ இயலின் தந்தையான இமானுவேல் கான்ட் என்பவர் இருந்தார். இவருக்கு அறிவியலை பற்றி தெரியாது. இவர் ஒரு தத்துவஞானி. இவர் என்ன சொன்னார் தெரியுமா? இந்த உலகமும், சூரியன் போன்ற கோள்களும் வானமண்டல்திலுள்ள கடின வெண்மேகத்திலிருந்து (NEBULAR) உருவாகி இருக்கலாம் என்றார்.

பிற்காலத்தில் பிரெஞ்சு நாட்டு விஞ்ஞானிகளும் வானியல் நிபுணர்களும் அறிவியல் அடிப்படையில் இமானுவேல் கான்ட் சொன்னதை உண்மை என்று உறுதி செய்தனர். இதில் பிறந்தது தான் (NEBULAR HYPOTHESIS). அதாவது ஒரு மிகப்பெரிய அறிவியல் இயக்கத்தை அறிவியலே படிக்காத ஒரு தத்துவ மேதை எளிதாக சொல்லி விட்டிருக்கிறார்.

தத்துவஞானிகள் எப்போதும் இந்த உலகத்தின் நன்மைக்காக சிந்தித்த காரணத்தால் பிரபஞ்சம் அவர்களுக்கு எளிதாக புரிந்து போனது. இப்படிப்பட்ட அரிய ஆற்றல் பெற்ற தத்துவஞானிகள் தான் ஒவ்வொரு நாட்டையும் ஆளவேண்டும் என்று பிளாடடோ சொல்லியிருக்கிறார்.  நீங்கள் இப்படி தத்துவஞானியாக இல்லாமல் தமிழை வைத்தே 5 முறை தமிழ்நாட்டை ஆண்டு விட்டீர்கள்.எனவே எனது வாழ்த்துக்கள்.

ஆனால் தமிழ்நாட்டின் இன்றைய நிலை என்ன என்பது உங்களுக்கே தெரியும். தமிழர்கள் சீமைச்சரக்கை குடித்து குடித்து வயிறு புண்ணாகி வருகிறார்கள்.சீமைசரக்கை குடிக்கும் போது கூடவே பான்பராக், குத்கா, சிகரெட் இத்யாதிகளையும் பிடிக்க வேண்டியதிருக்கிறது.

இப்படி சரக்கை அடித்து விட்டு வண்டியில் ஏறி வீட்டுக்கு புறப்படும் பலர் விபத்தில் சிக்கி வீட்டுக்கு போகாமல் மருத்துவமனைக்கு போகிறார்கள். சிலர் பரலோகம் போகிறார்கள். ஆக, ஈழத்தில் குண்டு வெடிப்பால் பலருக்கு கை,கால் இல்லை. தமிழ்நாட்டில் டாஸ்மாக் சரக்கால் பலருக்கு கைகால் இல்லை. ஈழத்தமிழர்களை சிங்களத்தினர் சுட்டதால் பல பெண்கள் விதவைகளாக ஆக்கப்பட்டார்கள். இங்கு டாஸ்மாக் சரக்கை அடித்து விட்டு கணவர்கள் பரலோகம் போனதால் பல பெண்கள் விதவைகளாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள்.

மக்களை மயக்கத்தில் ஆழ்த்தி ஆட்சி செய்வதும் ஒரு அரசியல் தான். நான் தவறாக சொல்லவில்லை. நீங்கள் மக்களை தமிழ் என்னும் போதை மயக்கத்தில் ஆழ்த்தி விட்டீர்கள். ஆனால் தமிழர்களின் அடையாளத்திற்கு எடுத்துக்காட்டான என்னை மறந்து போனதால் நானும் மெல்ல மெல்ல கண்டுகொள்ளப்படாத மீனவர்களை போல் தமிழ்நாட்டை விட்டு மறைந்து வருகிறேன். இனி என்னை பற்றி விரிவாக உங்களுக்கு சொல்கிறேன். இதற்கு பிறகாவது நீங்கள் என்னை காப்பாற்றி தமிழர்களையும் காப்பாற்றுவீர்கள் என்று நம்புகிறேன்.

என் பெயர் 'பனைமரம்' என்பார்கள் தமிழர்கள். இது உங்களுக்கு தெரிந்திருக்காவிட்டால் நீங்கள் அடிக்கடி சொல்லும் தமிழ் இலக்கியங்களில் என்னை பற்றி இருக்கும் வேறு பெயர்களை சொல்கிறேன்.

எனக்கு ' ஓடகம், தாலம், கரும்புறம், காமம்,பெண்ணை, போந்து, புற்பதி,புற்றாளி,தாளி,தருவிராகன் என்று பல பெயர்கள் இருக்கின்றன. ஆங்கிலத்தில் எனது தாவர பெயர் (borassus flabellifer). எனக்கு உங்கள் டாஸ்மாக் சரக்கு போல் இல்லாமல் நிறைய மருத்துவ குணங்கள் இருக்கிறது. அதனால் என்னை தமிழர்கள் கற்பக விருட்சம் என்றார்கள். கூடவே எனது பதனீருக்கு பத்ரகாளியம்மன் அமுதம் என்றார்கள். கடுமையான வெயில் காலத்தில் நான் காய்ந்து போக கூடாது என்பதற்காக பானையில் தண்ணீர் சுமந்து என்னை காப்பாற்றினார்கள் தமிழர்கள்.

திருவள்ளுவருக்கு எழுத ஓலை தொடங்கி தமிழ்மக்களுக்கு கல்கண்டு, கருப்பட்டி, கட்டில், சொளவு, வீடு வேய தட்டி என்று எல்லாமும் நான் தான். வான் நோக்கி உயர்ந்து சென்று மழையை வரவழைக்கும் ஆற்றல் எனக்குண்டு. இப்போது ஓசேன் படலம் ஓட்டை விழுந்து விட்டது என்கிறார்களே....என்னை நீங்கள் காப்பாற்றினால் ஓசேன் படலத்தை பற்றி நீங்கள் கவலைப்பட தேவையில்லை. நான் பார்த்துக் கொள்வேன்.

சரி.விடயத்திற்கு வருகிறேன். தமிழ்நாட்டில் நீங்கள் இலவசங்களை வாரி வழங்க டாஸ்மாக் வருமானம் தான் கைகொடுக்கிறது என்கிறார்கள். பதனீரில் கிடைக்காத போதையா ஓல்டு மாங்கிலும், மேன்சன் ஹவுசிலும் கிடைக்க போகிறது?

இப்போது கிடைக்கும் பிராந்தி, விஸ்கி,ரம்கள் எல்லாம் தமிழர்களின் குடலில் புற்றுநோயையும், புண்ணையும் வரவழைத்து பலருக்கு இப்போது கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் தாராளமாக ஒட்டப்படுகிறதே...பாவம் தமிழர்கள். எனது பனஞ்சாற்றால் உடலுக்கு என்ன நல்லது கிடைக்கும் பனங்கள் உண்டால் எப்படி போதை கிடைக்கும் என்று என்னை பற்றி தெரிந்த சித்தர்கள் எப்படி எழுதி வைத்திருக்கிறார்கள் தெரியுமா?

" பனஞ்சாறு, பனங்கள் அல்லது பதநீர் அருந்த உடலின் சக்தி அதிகரிக்கும். சிறுநீர் பெருகும். ஆரோக்கியத்தை தரும். மலச்சிக்கல் தீரும். மேகவெட்டை (gonnorrhoea). பெருங்கிரந்தி (syphilis) நோய்க்கு நல்லது. பனஞ்சாற்றை தேமல் உள்ள இடத்தில் தடவி வந்தால் தேமல் குணமாகும்.

உடலின் உட்சூடு தணியும். வெயில் காலத்தில் பதநீரை சாப்பிட கபம், நாள்பட்ட இருமல், குன்மம், தொண்டை நோய், தோல் நோய்கள் குணமாகும். சோகை தீரும். அம்மை நோயினால் ஏற்பட்ட வெப்பம் தீரும். இப்படி ஏராளமாக சொல்லியிருக்கிறார்கள்.

பனங்கள்ளை உண்டால் போதையும் மயக்கமும் உண்டாகும். நடைதளரும்.மந்தம் உண்டாகும். மதியை மயக்கும்.(இதெல்லாம் எனக்கு இருக்கும் கெட்ட குணங்கள் தான். நான் இல்லையென்று சொல்லவில்லை)
ஆனால் இன்றைக்கு நீஙகள் பிறந்த திருவாரூர் மாவட்டத்திலேயே கள்ளச்சாராயம் பெருக்கெடுத்து ஓடுகிறதே..அதை எதிர்த்து கேட்ட ஒரு கம்யூனிஸ்ட் கட்சி தோழரை கள்ள சாராய வியாபாரிகள் நடுரோட்டில் வெட்டி கொலை செய்தார்களே போன வாரத்தில்..அந்த கள்ள சாரயத்தை விடவா, 48 சதவீதம் ஆல்கஹால் கலந்த டாஸ்மாக் சரக்குகளை விடவா கெடுதல் செய்து விடப் போகிறேன்?

என்னை நம்பி தமிழ்நாட்டின் கிராமங்களில் பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் இருக்கிறார்கள். இவர்கள் இப்போது என்னில் இருந்து பதநீரை கூட இறக்குவதில்லை. காரணம், கள் இறக்க போவதாக சொல்லி உங்கள் காவலாளிகள் கைது செய்து வழக்கு போட்டு விடுகிறார்கள். சிவகிரி தாலுகாவில் நூற்றுக்கணக்கான பனை ஏறும் தொழிலாளர்கள் மீது இப்படி பொய் வழக்கு புனையப்பட்டதால் அவர்களது அரை வயிற்று கஞ்சிக்கும் இப்போது அடிவிழுந்திருப்பதாக ஊடகங்கள் சொல்கின்றனவே.இது உங்கள் கண்ணில் பட்டதா?

பனையால் தொழில் செய்ய கூடாது என்று தமிழர்களை நீங்கள் தடுத்தால் இன்னும் கொஞ்ச காலத்தில் தமிழகத்தின் பல கிராமங்களில் பசியும்,பஞ்சமும் பரவலாக வரத்தான் போகிறது. வறுமை பட்டியல் நீளத்தான் போகிறது. அவர்கள் எவ்வளவு காலம் தான் ஒரு ரூபாய் அரிசியில் காலம் தள்ளுவார்கள். அவர்களுக்கும் சுயமரியாதை இருக்கத்தானே செய்கிறது. அந்த சுயமரியாதை சிலிர்த்து விட்டால் பிறகு என்ன நடக்கும் என்று ரயில் தண்டவாளத்தில் தலை வைத்தும், பாளையங்கோட்டை சிறையில் பாம்புக்கும்,பல்லிக்கும் நடுவில் படுத்த உங்களுக்கு தெரியாதா?

இப்போது உங்கள் சட்டத்தை மீறி கொங்குநாட்டில் கள் இயக்கக்காரர்கள் பனங்கள்ளை இறக்கி சீமானுக்கும், சரத்குமாருக்கும் கொடுத்திருக்கிறார்கள். இனி தாராளமாக கள் இறக்குவார்கள் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இதனால் என் சந்ததியை ஏராளமாக இடங்களில் தமிழர்கள் வளர்ப்பார்கள் என்று மகிழ்ச்சி எனக்கு வந்திருக்கிறது. கள் இயக்ககாரர்களுக்கு நான் நன்றி சொல்கிறேன். நான் செழிக்க செழிக்க தமிழர்களை செழிக்க வைப்பேன் என்பதில் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

உறுதியாக உங்களுக்கு சொல்கிறேன். பிராந்தி, விஸ்கி, பீர்களை விட நான் ஒன்றும் தமிழர்களுக்கு கெடுதல் செய்வதில்லை. இதை விஞ்ஞானிகளும் என்னை சோதனை செய்து பார்த்து நிரூபித்து விட்டார்கள். இப்படி இருக்கும் போது, பதனீர் இறக்குவதை தடை செய்வது, பனைத்தொழிலாளர்கள் மீது பொய் வழக்கு போடுவது, அவர்களின் குடும்பங்களை பட்டினி போடுவது அடக்குமுறையாக தான் எனக்கு தோன்றுகிறது.

தமிழர்கள் மதி மயங்கி கிடக்கிறார்கள் என்று மட்டும் நீங்கள் நினைத்து விடவேண்டாம். உங்கள் அரசாங்கத்தின் அணுகுமுறையை மாற்றுங்கள், இல்லாவிட்டால் அவர்கள் மாற்றுவார்கள் என்பதை என்னால் தலைவணங்கா முடியாவிட்டாலும் நெடிதுயர்ந்து நின்று சொல்லிக் கொள்கிறேன்.

காரணம், மேலே சொன்ன தத்துவஞானியாக நீங்கள் இல்லாவிட்டாலும்., கொஞ்சம் தொலைநோக்கு பார்வையோடு சிந்திப்பீர்கள் என்று நம்புகிறேன். தமிழகம் ஊனமுற்றவர்களின் கூடாரமாகவும், விதவைகளின் கதறல் களமாகவும் மாறும் முன் முடிவெடுப்பீர்கள் என்று நம்புகிறேன். இந்தாருங்கள் கல்கண்டு. நீண்ட நேரம் படித்த களைப்பு நீங்க கொஞ்சம் பதனீர் தருகிறேன். ஆசுவாசப்படுத்திக் கொண்டு சிந்தியுங்கள் முதல்வரே!

ஐயா என்னால் எப்படி வருமானம் வரும் என்று சொல்கிறேன்

திண்டிவனத்திலிருந்து குச்சிக் கொளத்தூர் செல்லும் வழியில் என்னை நட்டிருக்கிறார்கள். ஏரிக்கரையில் வளர்க்கப்பட்டுள்ள என்னால் அந்த கிராமத்திற்கு ஆண்டுக்கு 5 லட்சம் வருவாய் கிடைக்கிறது. விழுப்புரம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டும் என்னால் தரப்படும் நுங்குகளால் 50 லட்சம் அளவுக்கு வருமானம் கிடைக்கிறது.

இதை உங்கள் பனை தொழில் வாரியத்தில் கேட்டுபாருங்கள். இப்படி என்னை தமிழகம் எங்கும் உள்ள ஆறுகள், தமிழகத்தில் உள்ள 39 ஆயிரம் ஏரிகள், குளக்கரைகளில் வளர்த்தால் என்னால் 40 ஆயிரம் கோடி அளவுக்கு வருமானம் (டாஸ்மாக் வருமானத்தை விட அதிகம்) கிடைக்கும்.

நான் சொல்லும் இந்த கணக்கு மிகை அல்ல. உங்களுக்கு நேரமிருந்தால் பனைவாரியத்தில் ஒருவரை நியமித்திருக்கிறீர்களே குமரி ஆனந்தன் என்ற பெயரில். அவரை மாற்றி விட்டு நல்ல வேளாண்மை அதிகாரியையும், விஞ்ஞானியையும் இது போன்ற பதவியில் நியமித்து என்னை வளர்க்க வேண்டிய திட்டங்களை தீட்டுங்கள்.

இந்த கடிதம், தந்தி, தமிழக மக்களின் உணர்ச்சிகளை நான் பார்த்து வடித்தது...இதை நீங்கள் அனுப்பும் தந்தியை மன்மோகன் பாவிப்பது போல் எண்ணிவிடமாட்டீர்கள் என்று நம்பி அனுப்புகிறேன். வாழ்க என்னை போல் நீங்களும்! ( இது  வஞ்சப்புகழ்ச்சி அல்ல)

இப்படிக்கு
பனைமரம் என்ற பரிதாபமாக நிற்கும் தமிழர் அடையாளம்.
நன்றி: Green India Foundation. 

Tuesday, March 1, 2011

உலகின் மிகப்பெரிய குடும்பம்




இது உலகின் மிகப்பெரிய குடும்பம். இந்தியாவின் மிஸோராம் மாநிலத்தின் மலைப்பாங்கான கிராமமான பக்த்வாங் கிராமத்தில்தான் இந்தக் குடும்பம் வசிக்கின்றது. இதன் மொத்த உறுப்பினர்கள் 181 பேர். 

இந்தக் குடும்பத்தின் தலைவர் ஸியோனாவிற்கு 39 மனைவிமார், 94 பிள்ளைகள், 14 மருமகள்மார், 33 பேரப்பிள்ளைகள். 

எல்லோரும் ஒரே வீட்டில் ஒன்றாக வசிக்கின்றனர். இவர்களின் வீடு நான்கு மாடிகளைக் கொண்டது. 100 அறைகள் உள்ளன. அறைகள் தவிர நடமாடும் வழிகளிலும் குடும்பத்தவர்கள் உறங்குகின்றனர். 

அதுவும் முட்டி மோதிக் கொண்டுதான். குடும்பத்தின் தலைவர் ஸியோனா வயது 67 தனக்கே உரிய ஒரு மதப் பிரிவைப் பின்பற்றுகின்றவர். இந்த மதப்பிரிவில் பலதாரத் திருமணத்துக்கும் தாராளமாக இடமுண்டு. 



இவ்வளவு பெருந்தொகை குடும்ப உறுப்பினர்கள் தன்னோடு சேர்ந்து வாழ்வது தனக்குக் கிடைத்த பாக்கியம் என்கிறார் இவர். அந்த வகையில் தான் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு விஷேட பிறவி என்கிறார். 

39 பெண்களுக்கு கணவனாகவும், மிகப் பெரிய குடும்பத்தின் தலைவனாகவும் இருப்பது இவருக்குப் பெருமையாகவும் உள்ளதாம். 

இந்தக் குடும்பத்தின் இனனொரு முக்கிய அம்சம் இவர்கள் யாருமே அரசாங்கத்திடமிருந்து எந்த உதவியும், நிவாரணமும் பெறாதவர்கள். 



குடும்பத்திலுள்ள எல்லா ஆண்களும் தச்சு வேலை செய்பவர்கள். அரசாங்கத்திடமிருந்து எந்த உதவியும் தேவையில்லை என்று மார் தட்டிக் கொள்கின்றனர். ஒரு காலத்தில் இந்தக் குடும்பத் தலைவர் வருடத்துக்குப் பத்துப் பெண்கள் என்ற ரீதியில் திருமணம் செய்து கொண்டவர். 

கிராமத்தவர்கள் இந்த வீட்டை புதிய தலைமுறை இல்லம் என்று அழைக்கின்றனர். இவர்களுக்கு தனியான பாடசாலை, விளையாட்டு மைதானம், தச்சு வேலை செய்யுமிடம், பன்றிப் பண்ணை, கோழிப் பண்ணை, வயல் நிலம், மரக்கறித் தோட்டம், என எல்லாமே உண்டு. இங்கிருந்து கிடைப்பவைகள் எல்லாமே இந்தக் குடும்பத்துக்கே சரியாகிவிடுகின்றது. 

இந்தக் குடும்பத்துப் பெண்கள் தினசரி உணவு தயாரிக்க பல மணித்தியாலங்களைச் செலவிட வேண்டியுள்ளது. 

ஒரு வேளை உணவுக்காக அரிசி மட்டும் 220 இறாத்தல் பொங்க வைக்க வேண்டும் குடும்பத் தலைவரின் மூத்த மனைவிக்கு 69 வயது. இவர் பெயர் சதியாங்கி. 

தினசரி மற்ற மனைவிமார் செய்யவேண்டிய வேலைகள், மருமகள்மார், மகள்மார் செய்யவேண்டிய வேலைகள் என காலையிலேயே பட்டியலிட்டு விடுவார்.

இங்கு எல்லோருடைய துணியும் கைகளால் தான் துவைக்கப்படுகின்றன.

இவர்கள் பின்பற்றும் மதப் பிரிவு ச்சானா என்று அழைக்கப்படுகின்றது. 

ஒரு காலத்தில் இயேசுவோடு சேர்ந்து உலகை ஆள்வோம் என்பது இவர்களின் நம்பிக்கை. 

இந்தக் குடும்பத் தலைவர் முதல் தடவையாகத் திருமணம் செய்தபோது அவருக்கு வயது 17. கடைசித் திருமணம் கடந்தாண்டில் நடந்தது. 

இந்த வீட்டில் இவரின் படுக்கையறை மட்டும்தான் ஆடம்பரமானது. இவர் விரும்பிக் கூப்பிடும் மனைவிதான் அன்றைய தினம் அவருடன் படுக்கைக்குச் செல்ல வேண்டும் மற்ற மனைவிமார் வீட்டின் முதல் மாடியில் உள்ள ஏனைய அறைகளில் இருக்கின்ற கட்டில்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். 

எப்போதும் இள வயது மனைவிமாரைத்தான் தன்னைச் சூழ அருகில் வைத்துக் கொள்வார். மனைவிமாருக்கு வயது போகப்போக தூரமும் அதிகரிக்கும். 



இருந்தாலும் இவரைச் சுற்றி இவருக்குப் பணிவிடை செய்வதில் மனைவிமார் சலித்துக் கொள்வதே இல்லை. இவருக்குச் செய்கின்ற பணிவிடை கடவுளுக்குச் செய்யும் பணிவிடை எனபது அவர்களின் நம்பிக்கை